Friday, September 16, 2011

யு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எடுப்பது பற்றிய அறிவிப்பு

அபுதாபி,செப்டம்பர் 16: ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் -வெளிநாட்டவர்களுக்கு (15 வயது மேற்பட்டவர்களுக்கு) எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுப்பது பற்றி 4 விதங்களில் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு அமீரக பகுதிகளான புஜைரா, ராஸ் அல் கைமா, உம்மு அல் க்வைன், மற்றும் அஜ்மான் ஆகியவற்றில் வாழும் வெளிநாட்டவர்கள் 2011 டிசம்பர் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
சார்ஜா-வில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
அபுதாபியில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஏப்ரல் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
துபாயில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஜூன் 1 -ஆம் தேதிக்கு முன்பும் எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்றும் யு .ஏ.ஈ. அரசு அறிவித்துள்ளது .

Thursday, September 15, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

சென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் .


பின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஊர்மக்கள் அனனவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



இப்படிக்கு
தலைவர்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்

Tuesday, September 13, 2011

உள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. !


"யாருஹாக்கா இந்த தடவை நம்ம ஊரு பிரஸிடெண்ட் போஸ்ட்க்கு வருவாங்க? முன்னேவெல்லாம் மர்ஹூம் M.M.S.(சாச்சா என்று மரியாதையுடன் அழைக்கப்பெற்ற) அவர்கள்தான் நிலைத்த நிர்வாகத்திற்கு வாழையடி வாழையா அதிரைப்பட்டினத்தின் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததில் நாமும் எந்தவிதமான யோசனையும் செய்யாம அவுங்களையே பிரசிடெண்டா தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் நீயா? நானா? போட்டிப் போட்டுக்குனுலே இருக்காவோ. ஊருலே பெருவாரியா இருக்குற நாமதானே முறையாக பேருராட்சியை ஆளனும்."

”சின்னப்பசங்க கிட்டே கொடுங்கப்பா... அவங்க எதாவது பண்ணுவாங்க..”

"இப்போ நிறைய படித்த இளைஞர்கள் இருக்காக, அவங்களிடம் பொறுப்பை கொடுத்த என்னவாம்!, அவங்களும் துடிப்பா செயல்பட வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எல்லா நிலமையிலும் திறமையா செயல்பட அவங்களுக்கு அனுபவம் பத்தாது, குறைந்தபட்சம் அவங்க வெளிநாட்டுக் கனவை தள்ளி வைப்பாங்களா! என்பதும் ஒரு கேள்விதான்".

”துடிப்பான இளைஞர்களே கிடையாதா..?”

”ஏன் கிடையாது, நிறைய இருக்காங்களே..! ஆனா நாம என்ன பண்ணுகிறோம் என்பதை விட அடுத்தவங்களை ஒண்ணும் பண்ண விடக்கூடாது என்பதில் தான் அவங்க துடிப்பை காட்டுறாங்க...”

இப்படி பரவலான பேச்சுக்களுடன், அதிரைப்பட்டினத்தின் தேர்வுநிலை பேருராட்சிக்கான உள்ளாட்சி மன்றத் தேர்தல் திருவிழா ஆரம்பித்துள்ளது.

வழக்கம்போலவே வெறும் பார்வையாளனாகவே இருந்து, ராவுத்தர் ஆண்டாலும் ரஹ்மான் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை... என்று தேர்தல் புறக்கணிப்பை ஃபேசனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும், அதிரைவாசிகளான உங்களுடன், உருக்கமாக சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் தூண்டுகோள் தான் இந்த கட்டுரைக்குக் காரணம்!

தமிழகத்தின் ஆட்சி மாறுதலுக்கு எப்படி குடும்ப அரசியல் ஒரு பெரிய காரணமாக அமைந்ததோ, அதைப்போல அதிரையின் பேருராட்சியின் ஆட்சி மாற்றத்திற்கு குப்பை ஒரு பெரும் பங்காற்ற போகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் அதற்காக குப்பை மட்டுமே அதிரையின் பிரச்சனையா? என்றால் கண்டிப்பாக இல்லை..! முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.

அதற்காக அதிரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வருவோம்... நம்மூர் கடற்கரையை சுற்றுலா தளமாக்குவோம்.. என்ற ஒரு நகராட்சித் தலைவரின் சக்திக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒரு பேருராட்சியின் எல்லைக்குட்பட்டு காலகாலமாக செய்ய இயலாத / செய்யத் தவறிய, கண்டிப்பாக செய்ய இயன்ற நிறைய நல்ல விசயங்களை இங்கே அலசுவோம் !

தமிழகத்தின் மூன்றாம் நிலை நகராட்சியிலேயே அரசுக்கு அதிகமான வரிகட்டும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சியால் ஒரு சிறிய ஊரின் குடிநீர் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனை, மின்சாரத் தட்டுப்பாடு, சாலை விளக்குகள், போன்ற அன்றாடப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க இயலாதிருப்பது ஆச்சரியமே..!

பாதாளச் சாக்கடைத் திட்டம், அகல ரயில் பாதை திட்டம் போன்றவை அதல பாதாளத்தில் தள்ளப் பட்டதிற்கு யார் காரணம்..? தமிழகக் குப்பைகளை ஒன்று சேர அள்ளியெடுத்து வந்து அதை ஒரே நாளில் சுத்தம் செய்யுமளவு, பணபலம் கொண்ட நமதூரின் உள்ளூர் குப்பைகளை அகற்றுவதற்கு முடியவில்லை என்பது வேடிக்கையாகவே இருக்கு !

அரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா? அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமாக செய்ததென்ன? செய்யப் போவதென்ன?

காலமெல்லாம் தம் குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் மெழுகுவர்த்தியாக சுடர் விட்டு உருகி, வாழ வேண்டுமென்று நாடு திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ள NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா? வெளிநாட்டு வாசிகள் என்றதும் அவரிடம் சிறப்பு ”பணப்பறிப்பு” மட்டும் தானே, அரசு பெயரால் நம்மால் செய்ய இயலும்?

சிறுதொழில் கடனுதவிகள், சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள், இப்படியான பல வாழ்வியல் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி எம்மக்களுக்கு என்ன வென்றே தெரியாமல் இருப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை..?

வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது... அதன் மதிப்புத் தெரியாமல் தண்ணீராக செலவழிக்கும் உள்ளூர் சொந்தங்கள்... இப்படி அரசு சம்பந்தப்பட்ட எந்த விசயமாக இருந்தாலும் பணத்தால் மட்டுமே சாதிக்க இயலுமென்ற மனப்போக்கிற்கு இந்த மக்களை அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் மாற்றியதைத் தவிர வேறென்ன சாதனைகளை செய்து விட்டார்கள்..?

அவர்களைச் சொல்லி குற்றமில்லை, நமதூரின் பேரூராட்சித் தலைவரை நாம் தேர்வு செய்வதில்லையே..? பணம் தானே நிர்ணயிக்கிறது...! அரசியலில் இருந்து 5 வருடங்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு பெரும் தொகையை கொடுத்து வார்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமைப் பதவிக்கு வருபவர்களின் அடுத்த குறி போட்ட தொகையை லாபத்துடன் எடுக்க வேண்டுமென்பதைத் தவிர வேறென்னவாக இருக்கும்..? ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று ஒரு பெரும் தொகையை முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க நினைப்பது தப்பில்லையே...?

இதைப்பற்றி நமக்கென்ன கவலை? இதனால் நாம் பாதிக்கப் படுவதில்லையே? என்ற சுயநலப் போக்குடன் இருக்கும் நம் மக்கள் அவர்களுக்கென்று ஒரு பிரச்சனைவரும் போது அந்தப் பாதிப்பை உணர்ந்து கொதித்தெழுந்தாலும், கோலி சோடாவின் காட்டத்தைப் போல மறு நொடியே வலுவிழந்து, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள்...!

இதற்குத் தீர்வே கிடையாதா? ஊரில் நல்லவர்களே இல்லையா..? என்றால் இருக்கிறார்கள்... எத்தனையோ சேவை மனப்பான்மையுள்ளோர் இனம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்.பணபலத்திற்கு முன்னால் தங்கள் தன்மானத்தை இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற பயத்தில் நல்ல உள்ளங்கள் முன் வரத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரின் நலனுக்காக வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியா வண்ணம் பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் எத்தனையோ நல்லுள்ளம் கொண்Dஅ புரவலர்கள், நமக்கேன் வீண்வம்பு என்று முகம் காட்ட மறுப்பவர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில நல்லவர்கள் அரசியல் கட்சிகள், அல்லது அமைப்புகள், தெருக்கள், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பலதரப்பட்ட வட்டத்திற்குள் சிக்கி. நீ பெரியவானா..? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மைக்கு உட்பட்டு ஈகோவில் சிக்கி எதையும் செய்ய இயலாவண்ணம் உறைந்து போயிருக்கிறார்கள்.

இந்த நிலைமாற என்ன வழி...?

ஒற்றுமை ! என்ற நபிமொழியின் ஒற்றை வார்த்தையைப் பற்றிப் பிடிக்கும் வண்ணம் ”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடிப்பதே” இவை அனைத்திற்கும் தீர்வாகும்.

பல வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் துவக்கப்பட்ட ஐக்கிய கமிட்டியை மீண்டும் தூசு தட்டி, தலைமுழுவாட்டி, புதுடிரெஸ் போட்டு மீண்டும் செயல்படுத்தவேண்டும். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும். மற்றவர்களுக்கு முன்னரே நாம் தான் இப்படியான ஐக்கிய கமிட்டியை முதலில் அமைத்தோம் வழிகாட்டியாக, ஆனால் வலி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டது, வழியை மற்றவர்கள் நன்றாகவே கண்டு கொண்டார்கள். இது எந்த வகையில் சாத்தியம் என்போர் கீழே தரப்பட்டிருக்கு சுட்டியை தட்டிப் பாருங்கள் அவர்களும் நம்மவர்கள்தான் வேற்றார்கள் அல்ல. நன்மையை நாடி யார் நல்லதைச் சொன்னாலும் கேட்டுத்தான் உள்வாங்குவோமே!

நம் பூர்வகுடி உறவுகள் எடுத்த தீர்மானங்கள் இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே, இருப்பினும் அல்லாஹ் நமக்கும் ஆராய்ந்து முடிவெடுக்கும் அறிவைத் தந்திருக்கிறான் அதனைக் கொண்டும் சிந்திப்போம்.

மேலும் பார்க்க : http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=1802

மாஷா அல்லாஹ் நம் சகோதரர்களின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது, நம் பூர்வகுடிச் சகோதரர்கள் இதை சாத்தியப் படுத்தும் போது நம்மால் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது? இது என் எண்ணம் மட்டுமல்ல, ஊர் நலனில் அக்கரை கொண்ட எத்தனையோ மவுன ஜீவன்களின் பேராசை! நான் அவர்களால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் மொழிபெயர்ப்ப்பு மட்டுமே இந்த ஆக்கம்.

இதெல்லாம் நடக்கக் கூடியதா? என்ற எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!

- அப்துல் மாலிக்

Monday, September 12, 2011

கைரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
















கைரேகையை ஆராய்வதற்காக புதிதாக ஆய்வு தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்ட் ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கைரேகை ஆய்வு குற்றவாளியின் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரையிலும் தடயப்பொருள்களில் காணப்படும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தே விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.
இந்த நிலையில் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் விரலில் ஒட்டிக் கொள்ளும் பொருட்களின் நுண்ணிய துகள்களை கொண்டு அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி உடலில் சுரக்கும் திரவங்கள் தொடும் பொருள் மீது ஒட்டிக்கொள்வதாக கூறப்படுகிறது.
எனவே ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் புதிய ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் உருவான கதை



தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்



 தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.                                          
                                             
இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள்









பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

நம்ம ஊரு பீச்சாங் கரை



கிழக்கு கடற்கரை சாலையில், புதுப்பட்டிணத்திற்கு சற்றே முன்பாக, அதிரையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வெளிவயல் கடற்கரை நமதூர் மக்களின் கோடைகேற்ற குளு குளு (Budget Beach) பீச்சாக உருவெடுத்துள்ளது.

ஒரு காலத்தில் என நினைவுகூறத்தக்க வகையில் அதிரை (செம்படவர் தெரு)கடற்கரை, மனோரா, ராஜாமடம் பாலம், மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம், (ஒரு பக்கம் அழிவு, ஒரு பக்கம் அழகு என சுனாமியால் அழகான) கீழத்தோட்டம் கடற்கரை மணல் என இளைப்பாரி வந்த நமதூர் மக்கள் தற்போது மாலைவேளைகளில், குறிப்பாக பெருநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவயல் கடற்கரையில் வண்டி வண்டியாய் வாகனங்களில் வந்து பொழுதுபோக்கி மகிழ்கின்றனர்.

பாசி படர்ந்த, ஓரளவு கழிமண் கலந்த அழுக்கு கடல் தான் என்றாலும் ஆர்ப்பரிக்கும் அலைகளும், சில்லென்ற காற்றும், பரந்த மணற்பரப்பும், கடற்கரையினுள் நுழையுமுன் வரவேற்கும் சவுக்கு மர தோப்பு வழிகளும், பசுமையான அலையாத்தி காடுகளும் கண்களின் உற்சாக டானிக், மனங்களின் மருந்து, குழந்தைகளின் குதூகலம் என்றால் மிகையில்லை.

செம்மண் சாலை, வாகனங்களை நிறுத்த இயற்கையான பார்க்கிங் என ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைந்திருந்தாலும், கருவாடு நாற்றமில்லாத இந்த கடற்கரையை குடும்பத்துடன், மார்க்கம் அனுமதிக்கும் ஆண் துணையுடன் வருபவர்கள் மட்டுமே பயன்படுத்துவது சாலச் சிறந்தது.

அழகிருந்தல் ஆபாத்தும் சேர்ந்திருக்கத்தானே செய்யும் எனவே, கீழ்க்காணும் விஷயங்களை கவனத்திற் கொள்ளுதல் நலம்.

1. ஐஸ்கிரீமுடன் மதுபானங்களையும் விற்கும் உ.பி.காரன்.
2. பார்க்கிங் பகுதியில் மரத்தடிகளில் குவிந்துள்ள ரொம்ப பிஸியான சூதாடிகள்.
3. வாப்பாக்கள் வாங்கித்தந்த பைக்கில் பவனி வரும் நமதூர் இளைஞர்கள்.
4. வயதுப்பிள்ளைகளை அந்நியரின் கண்களில் இருந்தும் பாதுகாத்து கொள்க, குறிப்பாக கடலில் இறங்கி குளிக்க அனுமதித்தல் கூடாது.
5. கடலில் குளிப்பவர்களுக்கு இலவச இணைப்பாய் கிடைக்கும் பாசியின் அரிப்பு.
6. வெளிவயல் கிராமத்தின் நடுவில், சாலையில் அமைந்துள்ள, தமிழக அரசின் பார் வசதியுடன் கூடிய சாராயக்கடையை ஈக்களாய் மொய்த்திருக்கும் குடிகார ஜென்மங்கள்.

என கண்ணில்படும் தீமைகளை இன்னும் பட்டியலிட முடியும் என்றாலும் பார்த்து, பதனமா, உங்க குடும்பத்தோட மட்டும் போயிட்டு வாங்க!

பார்க்க: வட்டமிடப்பட்ட பகுதியில் குடும்பத்தையே அடகு வைக்கத்துணியும் சூதாடிகள்






Thnaks
AIM






 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes