Wednesday, September 5, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சிறப்புக்கூட்டம் !


AAMF’ன் அடுத்த மாதாந்திரக் கூட்டம் நமதூர் M.S.M. நகரில் நடைபெறுவதாக அறிவித்ததையடுத்து அதில் சிறிது கால இடைவெளி ஏற்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு கடந்த 31-08-2012 அன்று நமதூர் கீழத்தெரு சங்கத்தில் சிறப்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன்படி கூட்டப்பட்ட கூட்டத்திற்கு AAMF’ன் நிர்வாகிகள் M. M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M. அப்துல் காதர், K.M. பரகத் அலி ஆகியோர் தலைமையிலும், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட AAMF’ன் ஒருங்கிணைப்பாளரும், சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவருமாகிய ஹாஜி ஜனாப்  M.S. ஷிஹாப்தீன் மற்றும் கீழத்தெரு முஹல்லாவின் அமீரக தலைவர் ஜனாப். அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலையிலும் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரலாக....

1. கிராஅத் : ஜனாப் S.M.A. அஹமது கபீர் அவர்கள்.

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளை கையாள்வதற்காக ஜனாப். மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கபட்டன. இவ்வழக்கின் தற்போதைய நிலைப் பற்றி அக்குழுவின் தலைவர் அவர்களால் விளக்கம் தரப்பட்டது.

4. சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற AAMF’ன் இரண்டாவது கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதை நாம் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக ஒரு சில இடங்களில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட ‘வெள்ளிக்கிழமைகளில் பணிகள் தொடர்கின்றன’ என்ற செய்தியை அடுத்து இதற்காக கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு AAMF’ன் சார்பாக நினைவூட்டல் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. AAMF’ன் சார்பாக நமதூர் காவல்துறை கண்காணிப்பாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

6. AAMF’ன் அதிகாரபூர்வ தகவல் தொடர்பாளராக சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் தொடர்வார் என்றும், AAMF’ன் தற்காலிக அலுவலகமாக கீழத்தெரு சங்கத்தின் முகவரியைப் பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

7. நமதூரில் ஒவ்வொரு வருடமும் நடைபெறக்கூடிய பெருநாள் தொழுகையை அனைத்து முஹல்லாவைச் சார்ந்த சகோதரர்களின் பங்களிப்புடனும், தொலைத்தூரங்களிலிருந்து வரும் நமது சகோதரர்களுக்காக வாகன வசதியையும் ஏற்பாடு செய்து கொடுத்து நமதூர் ‘பெரிய ஜூம்ஆ’ பள்ளியில் பெருநாள் தொழுகையை நடத்துவதற்கு AAMF’ன் ஒருங்கிணைப்பாளரும், சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவருமாகிய ஹாஜி ஜனாப்  M.S. ஷிஹாப்தீன் அவர்கள் தனது கோரிக்கையாக இக்கூட்டத்தில் வைத்தார்கள்.

8. கடந்த 23-03-2012 அன்று கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நான்காவது கூட்டத்தில் அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகத்திற்காக ஊழியர் ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுவை அடுத்து, இதற்காக சம்பந்தப்பட்ட தென் இந்திய ரயில்வே துறை – திருச்சி கோட்ட தலைமை அலுவலர் ( DRM ) அவர்களுக்கு கோரிக்கை மனு ஓன்று AAMF'ன் சார்பாக சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டன.

கோரிக்கை மனுவின் விவரம் :
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் – இது சேது பெருவழிச்சாலையில் அமைந்திருக்கும் கடற்கரையோர ஊர். இங்கு சுமார் அறுபது ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய பரந்த பகுதியாகவும், அதிக விவசாயிகளைப் பெற்ற இக்கடைமடைப் பகுதியைச் சுற்றி கடற்கரையோர கிராமங்களான ஏரிபுறக்கரை, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், மீமிசல் போன்ற பகுதிகளும் உள்ளன.

இவ்வூரிலிருந்து ஏறக்குறைய பதினைந்து ஆம்னி பஸ்கள் தினமும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை செல்கின்றன, அதேபோல் சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வருகின்றன. இதனால் ஆகக்கூடிய கூடுதலான செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வயோதியர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் போன்றோர்கள் பெரும் அவதிக்கும், இன்னலுக்கும் உள்ளாகின்றனர். இதுபோன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவர்கள் அனைவரும் விரும்புவது ரயிலில் பயணங்கள் மேற்கொள்வதையே இதற்காக டிக்கட் முன்பதிவு செய்வதற்காக தொலைதூரத்திலுள்ள பட்டுக்கோட்டை,முத்துப்பேட்டை, திருத்துறைபூண்டி போன்ற ஊர்களுக்குச் சென்று தங்களுடைய நேரம், வீண் அலைச்சல் போன்றவற்றை செலவழிப்பதோடு அல்லாமல் நீண்ட வரிசையில் நின்று காத்துக்கிடக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய ரயில்வே துறையிலிருந்து அதிராம்பட்டினம் ரயில்வே நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முன் பதிவு செய்யும் உபகரணங்கள் அனைத்தும் இப்பணியை மேற்கொள்ள நிரந்தர ஊழியர் ஒருவர் இல்லாமல் பயனற்று முடங்கிபோய் கிடக்கின்றன.

ஆகையால் அதிராம்பட்டினம் மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் படுகின்ற சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இதற்காக நிரந்தர ஊழியர் ஒருவரை பணி நியமனம் செய்து “டிக்கெட் முன் பதிவு” செய்யும் வசதியை துவக்க வேண்டுமாய் அதிகாரி அவர்களை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

9. இறுதியாக ‘துஆ’வுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றது.


குறிப்பு : 
1. நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் கீழத்தெரு சங்க நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

2. AAMF’ன் அடுத்தக்கூட்டம் நமதூர் M.S.M. நகர் முஹல்லாவில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ் ! இதற்குரிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes