Friday, September 16, 2011
யு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எடுப்பது பற்றிய அறிவிப்பு
அபுதாபி,செப்டம்பர் 16: ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் -வெளிநாட்டவர்களுக்கு (15 வயது மேற்பட்டவர்களுக்கு) எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுப்பது பற்றி 4 விதங்களில் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு அமீரக பகுதிகளான புஜைரா, ராஸ் அல் கைமா, உம்மு அல் க்வைன், மற்றும் அஜ்மான் ஆகியவற்றில் வாழும் வெளிநாட்டவர்கள் 2011 டிசம்பர் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
சார்ஜா-வில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
அபுதாபியில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஏப்ரல் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
துபாயில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஜூன் 1 -ஆம் தேதிக்கு முன்பும் எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்றும் யு .ஏ.ஈ. அரசு அறிவித்துள்ளது .
Thursday, September 15, 2011
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு
சென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் .
பின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஊர்மக்கள் அனனவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தலைவர்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்
Tuesday, September 13, 2011
உள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. !
"யாருஹாக்கா இந்த தடவை நம்ம ஊரு பிரஸிடெண்ட் போஸ்ட்க்கு வருவாங்க? முன்னேவெல்லாம் மர்ஹூம் M.M.S.(சாச்சா என்று மரியாதையுடன் அழைக்கப்பெற்ற) அவர்கள்தான் நிலைத்த நிர்வாகத்திற்கு வாழையடி வாழையா அதிரைப்பட்டினத்தின் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததில் நாமும் எந்தவிதமான யோசனையும் செய்யாம அவுங்களையே பிரசிடெண்டா தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் நீயா? நானா? போட்டிப் போட்டுக்குனுலே இருக்காவோ. ஊருலே பெருவாரியா இருக்குற நாமதானே முறையாக பேருராட்சியை ஆளனும்."
தமிழகத்தின் ஆட்சி மாறுதலுக்கு எப்படி குடும்ப அரசியல் ஒரு பெரிய காரணமாக அமைந்ததோ, அதைப்போல அதிரையின் பேருராட்சியின் ஆட்சி மாற்றத்திற்கு குப்பை ஒரு பெரும் பங்காற்ற போகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் அதற்காக குப்பை மட்டுமே அதிரையின் பிரச்சனையா? என்றால் கண்டிப்பாக இல்லை..! முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.
மாஷா அல்லாஹ் நம் சகோதரர்களின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது, நம் பூர்வகுடிச் சகோதரர்கள் இதை சாத்தியப் படுத்தும் போது நம்மால் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது? இது என் எண்ணம் மட்டுமல்ல, ஊர் நலனில் அக்கரை கொண்ட எத்தனையோ மவுன ஜீவன்களின் பேராசை! நான் அவர்களால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் மொழிபெயர்ப்ப்பு மட்டுமே இந்த ஆக்கம்.
இதெல்லாம் நடக்கக் கூடியதா? என்ற எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!
- அப்துல் மாலிக்
நன்றி: அதிரை நிருபர்
Monday, September 12, 2011
கைரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
கைரேகையை ஆராய்வதற்காக புதிதாக ஆய்வு தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்ட் ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கைரேகை ஆய்வு குற்றவாளியின் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரையிலும் தடயப்பொருள்களில் காணப்படும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தே விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.
இந்த நிலையில் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் விரலில் ஒட்டிக் கொள்ளும் பொருட்களின் நுண்ணிய துகள்களை கொண்டு அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி உடலில் சுரக்கும் திரவங்கள் தொடும் பொருள் மீது ஒட்டிக்கொள்வதாக கூறப்படுகிறது.
எனவே ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் புதிய ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் உருவான கதை
தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.
இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள்
பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
நம்ம ஊரு பீச்சாங் கரை
கிழக்கு கடற்கரை சாலையில், புதுப்பட்டிணத்திற்கு சற்றே முன்பாக, அதிரையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வெளிவயல் கடற்கரை நமதூர் மக்களின் கோடைகேற்ற குளு குளு (Budget Beach) பீச்சாக உருவெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் என நினைவுகூறத்தக்க வகையில் அதிரை (செம்படவர் தெரு)கடற்கரை, மனோரா, ராஜாமடம் பாலம், மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம், (ஒரு பக்கம் அழிவு, ஒரு பக்கம் அழகு என சுனாமியால் அழகான) கீழத்தோட்டம் கடற்கரை மணல் என இளைப்பாரி வந்த நமதூர் மக்கள் தற்போது மாலைவேளைகளில், குறிப்பாக பெருநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவயல் கடற்கரையில் வண்டி வண்டியாய் வாகனங்களில் வந்து பொழுதுபோக்கி மகிழ்கின்றனர்.
பாசி படர்ந்த, ஓரளவு கழிமண் கலந்த அழுக்கு கடல் தான் என்றாலும் ஆர்ப்பரிக்கும் அலைகளும், சில்லென்ற காற்றும், பரந்த மணற்பரப்பும், கடற்கரையினுள் நுழையுமுன் வரவேற்கும் சவுக்கு மர தோப்பு வழிகளும், பசுமையான அலையாத்தி காடுகளும் கண்களின் உற்சாக டானிக், மனங்களின் மருந்து, குழந்தைகளின் குதூகலம் என்றால் மிகையில்லை.
செம்மண் சாலை, வாகனங்களை நிறுத்த இயற்கையான பார்க்கிங் என ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைந்திருந்தாலும், கருவாடு நாற்றமில்லாத இந்த கடற்கரையை குடும்பத்துடன், மார்க்கம் அனுமதிக்கும் ஆண் துணையுடன் வருபவர்கள் மட்டுமே பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
அழகிருந்தல் ஆபாத்தும் சேர்ந்திருக்கத்தானே செய்யும் எனவே, கீழ்க்காணும் விஷயங்களை கவனத்திற் கொள்ளுதல் நலம்.
1. ஐஸ்கிரீமுடன் மதுபானங்களையும் விற்கும் உ.பி.காரன்.
2. பார்க்கிங் பகுதியில் மரத்தடிகளில் குவிந்துள்ள ரொம்ப பிஸியான சூதாடிகள்.
3. வாப்பாக்கள் வாங்கித்தந்த பைக்கில் பவனி வரும் நமதூர் இளைஞர்கள்.
4. வயதுப்பிள்ளைகளை அந்நியரின் கண்களில் இருந்தும் பாதுகாத்து கொள்க, குறிப்பாக கடலில் இறங்கி குளிக்க அனுமதித்தல் கூடாது.
5. கடலில் குளிப்பவர்களுக்கு இலவச இணைப்பாய் கிடைக்கும் பாசியின் அரிப்பு.
6. வெளிவயல் கிராமத்தின் நடுவில், சாலையில் அமைந்துள்ள, தமிழக அரசின் பார் வசதியுடன் கூடிய சாராயக்கடையை ஈக்களாய் மொய்த்திருக்கும் குடிகார ஜென்மங்கள்.
என கண்ணில்படும் தீமைகளை இன்னும் பட்டியலிட முடியும் என்றாலும் பார்த்து, பதனமா, உங்க குடும்பத்தோட மட்டும் போயிட்டு வாங்க!

பார்க்க: வட்டமிடப்பட்ட பகுதியில் குடும்பத்தையே அடகு வைக்கத்துணியும் சூதாடிகள்
Thnaks
AIM