Tuesday, April 17, 2012

வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி....

தற்காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கும் வட்டி அடிப்படையிலான வங்கிகள் (Commercial Banks) அவற்றின் ‘சேவைகளால்’ பிரபலமடைந்திருப்பது நிதரிசனமாகும். அவற்றுக்கு எதிராக நமதூரில் வட்டியின் வாடையே இல்லாத – வட்டியின் நிழலே படியாத – இஸ்லாமிய வங்கிச் சேவையின் முதல் அத்தியாயம், ‘கர்ழன் ஹஸனா’ – அழகிய கடன் அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை இதன் மூலம் அறியத் தருகின்றோம்.



ஊரின் எல்லா ஜுமுஆப் பள்ளிகளிலும் நோட்டீஸ் மூலம் அறிவிப்புச் செய்து, இம்மாதம் முதல் இச்சேவை தொடங்கியுள்ளது. முதலில், வட்டியின் மூலம் பெரிதும் பாதிப்படையும் சிறுதொழில் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள், குடிசைத் தொழில் செய்பவர்கள் போன்றவர்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சிறு தொகையைக் கடனாக வழங்கி, முதலில் வட்டிக் கொடுமையிலிருந்து அவர்களை விடுவிப்பது இவ்வமைப்பின் முதல் நோக்கமாகும்.

இஸ்லாமிய வழிகாட்டலில் நமது பொருளாதாரத் திட்டத்தை அமைக்க வேண்டும்; அதைப் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய அனைவரும் இந்தப் புனிதச் சேவையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தும் வாய்ப்பாக, ஒவ்வொருவரும் ரூ 1000 (ஆயிரம் ரூபாய் மட்டும்) செலுத்தி, தம்மை இதன் ஆயுள் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கோருகின்றோம். விருப்பமும் ஆர்வமும் வசதியும் உள்ளவர்கள், இதைவிடக் கூடுதலான தொகையைச் செலுத்தித் தம் பங்களிப்பைப் பெரிதாக்கிக் கொள்ளலாம்.

நமதூரில் மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், வசதி பெற்ற வணிகர்கள், மார்க்கப் பற்றுள்ள இளைஞர்கள், மற்றும் கல்வி கற்ற ஆண்-பெண் பொதுமக்கள் நிறையப் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தமக்குரிய பங்களிப்பை இந்த ‘அழகிய கடன் அறக்கட்டளை’க்கு வழங்கி, நன்மையிலும் இறையச்சத்திலும் உதவியாளர்களாக இணையுமாறு கோரப்படுகின்றார்கள். இதோ, அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்:

“நன்மைக்கும் இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் வரம்பு மீறலுக்கும் நீங்கள் உதவியாளர்களாக இருக்காதீர்கள்!” (05:02)

மேற்கொண்டுள்ள விவரங்களுக்கு இணைப்பு நோட்டீசைப் பார்க்கவும்.


Thanks
Adiraixpress

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes